தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் தங்கையாதவமணி என்கிற ஞானதுரை (67) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிபதி முருகன் நேற்று (16.9.2026) வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், தங்கையாதவமணி என்கிற ஞானதுரை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.