பஞ்சு விலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், பின்னலாடை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒசைரி நூலின் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. 2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரையிலான பருத்தி ஆண்டு நிறைவடைய இன்னும் 15 நாட்களே உள்ளன. இதையொட்டி, இருப்பில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு சந்தைக்கு வருவது தற்போது அதிகரித்துள்ளது. மேலும், சில மாநிலங்களில் முன்கூட்டியே பருத்தி அறுவடை தொடங்கியதால், புதிய பஞ்சு வரத்தும் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தினசரி பஞ்சு வரத்து 2,200 பேல்களாக இருந்தது. ஒரு பேல் 170 கிலோ எடையுடையது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி தினசரி வரத்து 10 ஆயிரம் பேல்களை எட்டியுள்ளது. சந்தையில் பஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. புதிய பஞ்சு வரத்து மேலும் அதிகரிக்கும்போது, விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி பஞ்சு விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பின்னலாடை உற்பத்திக்கான ஒசைரி நூல் விலையும் கிலோவுக்கு ரூ.5 அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது பஞ்சு விலை குறையத் தொடங்கியுள்ளதால், நூல் விலையும் கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. தொடர்ச்சியான விலை உயர்வுகளுக்குப் பிறகு நூல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.