30 பேருக்கு பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகள் பரிசு! தமிழக வாலிபரின் வீடியோவால் பரபரப்பு - விசாரணைக்கு உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

30 பேருக்கு பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகள் பரிசு! தமிழக வாலிபரின் வீடியோவால் பரபரப்பு - விசாரணைக்கு உத்தரவு

30 பேருக்கு பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகள் பரிசு! தமிழக வாலிபரின் வீடியோவால் பரபரப்பு - விசாரணைக்கு உத்தரவு

சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த நபர் மீது விசாரணை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெறுவதற்காக பல்வேறு வகையான ரீல்ஸ் மற்றும் பதிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.அந்த வீடியோவில், தனது பதிவுக்கு விருப்பம் தெரிவித்து, அதை 30 பேருக்கு பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகள் பரிசாக வழங்கப்படும் என சண்முகம் தெரிவித்திருந்தார். மேலும், தனது பதிவை அதிகமானோர் பகிரும் அளவுக்கு அதற்கேற்ப லட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோ பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் புகார்கள் சென்றன.இதையடுத்து, புனிதமான லட்டு பிரசாதத்தை சுய விளம்பரத்துக்கும் சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுத்தியதாக கூறப்படும் செயலை தேவஸ்தானம் கடுமையாக கண்டித்துள்ளது.இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கே.வி.முரளி கிருஷ் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சண்முகம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.மேலும், வீடியோவில் காட்டப்பட்ட லட்டுகள் உண்மையான திருப்பதி லட்டுகள்தானா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. லட்டு பிரசாதத்தை வணிக நோக்கத்திற்காகவும், சமூக வலைதள விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்துவதையும், அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.