இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், மனைவிக்கு சுமார் 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டதாக 60 வயது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 12 பேரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மான்செஸ்டர் மின்ஷூல் ஸ்ட்ரீட் கிரவுன் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கணவர் மீது மொத்தம் 60 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் 5 பாலியல் வன்கொடுமைகள், 3 பாலியல் கொடூர தாக்குதல்கள், 6 பாலியல் தாக்குதல்கள் மற்றும் மனைவியின் அனுமதியின்றி அவரது ஆபாச புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும். முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அந்த நபர், பின்னர் நீதிமன்றத்தில் அவற்றை ஒப்புக்கொண்டார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, அவரது மனைவியும் நீதிமன்ற அறையில் இருந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற 12 பேரின் வயது 28 முதல் 74 வரை உள்ளது. இங்கிலாந்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், பல்வேறு காலகட்டங்களில் அந்தப் பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த 12 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த வாரம் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. இதுகுறித்து உதவி தலைமை காவலர் ரிக் ஜாக்சன் கூறுகையில், இந்த வழக்கு மிகவும் சிக்கலான விசாரணையாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கொடூரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் காவல்துறை கவனம் செலுத்தி வருவதாகவும், அவருக்கு சிறப்பு ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.