தமிழகத்தில் நிலவும் வானிலை சூழல் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் காணப்படும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.